Friday, May 11, 2012

Rama Vijaya - Chapter-43

ராம விஜயம் --43



[மகனை இழந்த நிலையில்] இனி என்ன செய்வதெனத் தெரியாமல் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்த ராவணனுக்கு அவனது மந்திரிகளில் ஒருவன், வித்யா என்பவன், பாதாள லோகத்தில் இருக்கும் ராவணனின் மாமன்கள், அஹிராவணன், மஹிராவணன் உதவியை நாடுமாறு ஆலோசனை சொன்னான். அதன்படியே, ராவணனும் அவர்களுக்கு ஓலை அனுப்பி, அவர்களைத் தனது அரண்மனைக்கு வரவழைத்து, தான் தற்போது இருந்துவரும் சங்கட நிலையை விவரித்தான். அதைக் கேட்ட அவனது மாமன்மார் இருவரும் ,' நீ இனி கவலைப்பட வேண்டாம். நாங்கள் இன்று இரவே ராமனையும், லக்ஷ்மணனையும் எங்களது பாதாள லோகத்திற்குக் கொண்டு சென்று, நடுநிசியில் எங்களது குலதேவதைக்குப் பலி கொடுத்து விடுகிறோம்' என தைரியம்
கொடுத்தனர்.
விபீஷணனின் நம்பிக்கைக்குகந்த மந்திரிகளில் ஒருவன் இந்த விஷயத்தை ஒட்டுக்கேட்டு, அதை விபீஷணனுக்குத் தெரியப் படுத்தினான். மாருதி, நளன், சுக்ரீவன் மற்றும் இதர வானரர்களிடம் இந்தச் செய்தியை விபீஷணன் சொல்லி, ராம, லக்ஷ்மணர்களைக் கவனமாகப் பாதுகாக்கும்படி எச்சரித்தான். அனைத்து வானரர்களும் தங்களது வால்களை நீட்டிப் பிணைத்து, ஒரு அரணாக அமைத்துக்கொண்டு அதன் நடுவில் ராம., லக்ஷ்மணர்களை ஒரு கட்டிலில் படுக்கச் செய்து, வெளியில் அமர்ந்து, காவல் காத்தனர்.
நள்ளிரவு நேரத்தில் அங்கே வந்த அஹிராவணனும், மஹிராவணனும் இந்த வலுவான அரணைக் கண்டு ஆச்சரியமுற்றனர். ராம, லக்ஷ்மணர்களை நெருங்க இயலாமல், பூமிக்கு அடியில் சென்று, அதைக் குடைந்து அதன் வழியே ராம, லக்ஷ்மணர்களை அந்தக் கட்டிலோடு அப்படியே எடுத்துக்கொண்டு, பாதாள லோகத்தில் இருக்கும் மஹிகாவதி என்னும் இடத்துக்குச் சென்று, ஒரு பத்திரமான இல்லத்தில் அவர்கள் இருவரையும் மயக்க நிலையில் ஆழ்த்தினர். மகரத்வஜன் என்னும் அசுரன் தலைமையில் இருபது கோடி அசுரர்களை பாதாளத்திலிருந்த கடலுக்கு அருகிலிருந்த அந்த வீட்டின் முகப்பில் காவலுக்கு வைத்தனர்.
பொழுது விடிந்ததும் ராமனைக் காணச் சென்ற வானரர்கள், அவர்கள் இருவரும் மாயமாக மறைந்துபோனதைக் கண்டு அதிர்ச்சியுற்றனர். குடைந்தெடுக்கப்பட பூமியையும், அதனருகே சில காலடித் தடங்களையும் கண்டு, அவர்களைச் சில அசுரர்கள் பாதாள லோகத்துக்குக் கொண்டு சென்றுவிட்டதாக முடிவு செய்தனர். எப்படி அங்கு செல்வது, அவர்களைக் கண்டுபிடித்து மீட்பது எனத் தெரியாமல் குழம்பினர். அப்போது விபீஷணன் அங்கே வந்து, 'இப்படி நீங்கள் குழப்பத்தில் கூச்சலிட்டால், ராவணனுக்கு இந்த விஷயம் தெரிந்து விடும். உடனே உங்களையெல்லாம் அழித்து விடுவான். எனவே நீங்கள் ஒன்றும் வெளியே காட்டிக் கொள்ளாமல் இருக்க வேண்டும்' என எச்சரித்தான். விபீஷணனும், இதர வானரர்களும் மாருதியைப் பார்த்து, அந்தக் குடைவின் வழியே சென்று, ராம, லக்ஷ்மணர்கள் இருக்கு இடத்தைக் கண்டறிய முடியுமா எனக் கேட்டனர். 'என் உயிரைக் கொடுத்தாவது, ராம, லக்ஷ்மணர்களை நான் காப்பாற்றிக் கொண்டு வருவேன்' என மாருதி சபதம் செய்தான். உடனே, நளன், நீலன், அங்கதன், ஜாம்பவான் ஆகியோருடன் அந்தச் சுரங்கத்தின் வழியே சென்று, மிகவும் கஷ்டப்பட்டு, இறுதியில் அரையுயிராய், ஒரு சமுத்திரக் கரையை அடைந்தனர். அங்கு வீசிய குளிர்ந்த காற்று அவர்களுக்குப் புத்துணர்ச்சி அளித்தது. அங்கே பல அசுரர்கள் காவலுக்கு இருந்ததைக் கண்டதும், தங்களை யாத்ரீகர்கள் போல உரு மாற்றிக்கொண்டு, அவர்களிடம் சென்று, மஹிகாவதிக்குச் செல்லும் வழியைச் சொல்லுமாறுக் கேட்டனர்.
[தொடரும்]
(Translated into Tamil by Sankarkumar and Uploaded by Santhipriya) 

To Read the earlier Chapters Click on the nos given below

முந்தைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள
எண்கள் மீது கிளிக் செய்யவும்
33 34 35 36 37 38 39 40 41 42
43  44  45  46  47  48  49  50  51

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.